Monday, March 19, 2018

அவள் தந்த முத்தம்

Courtesy: Google Images
இன்றைய பதிவு நான் பார்த்த ஒரு குறும்படம் பற்றியது. படத்தின் பெயர் கிஸ்.  படத்தின் பெயர் தான் ஆங்கிலத்தில். படம் என்னவோ தமிழ் படம் தான்.

சமூகத்தின் கீழ்தட்டில் இருக்கும் சாதாரண இளவட்டங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை இயல்பாக சித்தரிக்கும் ஒரு குறும்படம். கதாநாயகன் தண்ணீர் குப்பி விநியோகம் செய்யும் ஒரு விடலை. அவன் பெயர் படம் முழுக்க எங்குமே சொல்லப்படவில்லை. கதாநாயகி பிரியா வீட்டுவேலை செய்யும் ஒரு விடலி. ஒரே ஒரு முறை கதாநாயகன் அவளை பெயர் சொல்லி அழைப்பதால் அது நமக்கு தெரிகிறது. எப்போதும்போல் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்கிறான். அதை அவன் அவளுக்கு தெரிவித்ததுமே, அதை எதிர்பார்த்திருந்தவளாய், அவளும் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் எற்றுக்கொள்கிறாள்.

ஒருநாள் இருவரும் கடற்கரைக்கும் போகிறார்கள். கடற்கரையில் இருவரும் கதாநாயகனின் கைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கையில், அவன் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவள் அவன் கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு ஓடுகிறாள். அவளை துரத்திச் செல்கையில் அவன் கைபேசி அலை நீரில் விழுந்திவிடுகிறது.

பழுதான கைபேசியை சரி செய்த கடைக்காரன், அதை திருப்பிக் கொடுக்க இரண்டாயிரத்து ஐநூறு ருபாய் கேட்கிறான். காரணம் கைபேசியில் இருந்த அந்த முத்தக்காட்சி வீடியோ. கேட்ட பணத்தை தராவிட்டால் வீடியோவை இணையத்தில் ஏற்றிவிடுவதாக மிரட்டுகிறான். கதாநாயகன் நண்பர்களிடம் அழுதுகொண்டே விஷயத்தை சொல்ல அவர்கள் சென்று பிரச்னையை முடித்துவைக்க பார்க்கிறார்கள். அனால் அவர்கள் சென்றவுடன் கடைக்காரன் கேட்ட தொகை 2500-ல் இருந்து 5000 ஆகிவிடுகிறது. காதலிக்கு தெரிந்தால் அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்று பயப்படுகிறான் அவன். இரண்டாயிரம் ருபாய் கொடுத்து கைபேசியை திரும்பப்பெற முயற்சிக்கிறான் கதாநாயகன். ஆனால் கடைக்காரனோ பிடிவாதமாக இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் காதலியிடம் நடந்த விஷயத்தை சொல்லி அழுகிறான்.

அவள் அவனை அழைத்துக்கொண்டு கடைக்கு வருகிறாள். அவளை பார்த்ததும் கைபேசியை சரி செய்வதற்கான தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு கைபேசியை திருப்பி தருகிறான். அனால் அவளோ கடைக்காரன் வைத்திருக்கும் அந்த வீடியோவை உடனே அழிக்கச் சொல்கிறாள். அவன் பிறகு செய்வதாய் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அவளிடமும் அவன் அந்த வீடியோவை  இணையத்தில் ஏற்றப்போவதாக மிரட்ட, கதாநாயகி பிரச்சினையை எப்படி முடிக்கிறாள் என்பதுடன் முடிகிறது. படம். என்ன செய்கிறாள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் எல்லாருமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகியும் நாயகனும். நிலைமை கைமீறி போனதால் நாயகன் அழுதாலும், கடைக்காரன் நாயகியை திட்டும்போது பொங்குவது, சூழ்நிலைகள் சாதுவையும் முரடனாக்கிவிடும் என்று காட்டுகிறது. கதாநாயகி அவள் நிலையையொத்த பெண்களுக்கே உரிய தைரியத்துடன் வலம் வருகிறாள். நாயகனுடன் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும்போது, அவன் பக்கம் திரும்பும்போது சிடுசிடுப்பதும் மறுபுறம் திரும்பி சந்தோஷமும் காதலும் கலந்த புன்னகை பூப்பதும் அழகு.

கடைக்காரன் வீடியோவை அழிக்க மறுக்கும்போது நாயகி நாயகனை பார்த்து கம்ப்யூட்டரில் இருக்கும் வீடியோவை தேடி அழிக்க தெரியுமா என்று கேட்கிறாள். அவனும் நன்றாக தெரியும் என்கிறான். அவ்வளவு தெரிந்தவன், கைபேசியை சரிசெய்ய கொடுக்கும்போது அதில் இருக்கும் மெமரி கார்டை எடுத்துவிட்டு தரவேண்டும் என்று தெரியாதா. இத்தனைக்கும் அவன் கைபேசியை கடைக்காரனிடம் தரும்போது பேட்டரியையும் சிம் கார்டையும் கழற்றிவிட்டுத்தான் தருகிறான்.

நாயகனின் நண்பர்கள் கதாபாத்திரங்களும் மிகையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவன் ஆறுதல் சொல்வது, ஒருவன் ஜாக்கிரதை உணர்வுடன் யோசிப்பது, மற்றொருவன் சண்டைக்கு தயாராவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நாயகனுக்கு உதுவுகிறார்கள்.

நாயகி கடைக்காரனிடம் வாக்குவாதம் செய்யும்போதே எனக்குள் இருந்த இயக்குன(ன்)ர் விழித்துக்கொண்டான். நான் ஊகித்தது போலவே படம் முடிந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.


நீங்களும் குறும்படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.




Saturday, March 17, 2018

பரீட்சைக்கு நேரமாச்சு


தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு போதுக்தேர்வுகள் நேற்று (16.03.2018) துவங்கின. முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் நேற்று நடந்தது. இதைப்பற்றி தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை கேட்டு சிரிப்பதா, கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று புரியவில்லை. விஷயம் இதுதான். நேற்றைய தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் சொன்னார்களாம். அதை சில மாணவர்களிடம் பேட்டி வேறு எடுத்து ஒளிபரப்பினார்கள்.


புத்தகத்தில் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் கேள்விகளை கேட்காமல் வேறு கேள்விகள் கேட்டு விட்டார்களாம். அதுவும் எப்படிப்பட்ட கேள்விகள் தெரியுமா? ஒரு மதிப்பெண் கேள்விகள். பெரும்பாலும் ஒற்றைச்சொல் விடை கொண்டவை.



ஒரு மதிப்பெண் கேள்விகள் அந்த பாடத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயங்கள் பற்றி தான் இருக்கும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கு அப்படிப்பட்ட ஒரு விடை எழுதுவது கடினம் என்றால் அவர்களின் தரம் பற்றி என்ன சொல்வது. இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கப்போகும் விஷயங்களை புரிந்துகொண்டு  சுயமாக முடிவெடுப்பார்கள் என்று தெரியவில்லை.

                                                                              

எத்தனையோ முறை நமது கல்வி முறை மாற்றப்பட வேண்டியதைப்பற்றி பேசப்பட்டிருந்தாலும், அதை செய்வதற்கு யாரும் தயாராக இருப்பதாக  தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பாடத்திட்டம் மாற்றப்படுகிறதே தவிர, கற்பிக்கும் முறையிலோ, தேர்வு முறையிலோ எந்த மாற்றமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. நம் சமூகத்திற்கு என்று மதிப்பெண் மீதான மோகம் தீர்ந்து அறிவு மீதான தாகம் வருகிறதோ, அன்றுதான் ஒரு விடிவு வரும் என்று தோன்றுகிறது.

Saturday, March 10, 2018

பத்மாவத் - என் பார்வையில்


சில நாட்களுக்கு முன் பத்மவத் படம் 3டி-ல் பார்த்தேன். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முஹம்மது ஜாயசி என்பவர் எழுதிய பத்மாவதி என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்பதால் படத்தை பற்றிய என எண்ணங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

படத்தின் ஆரம்பமே அலாவுதீன் கில்ஜியின் அதீத முரட்டு குணத்தை காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. படைத்தலைவனான அலாவுதீன் சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் மகள் நெருப்புக்கோழியின் இறகை கேட்டாள் என்பதற்காக ஒரு நெருப்புக்கோழியையே பிடித்துக்கொண்டு வந்து தருகிறான். அதற்கு பரிசாக அவளையே மணக்கிறான்.


அவன் ஒரு போரில் வென்று கைப்பற்றும் ஒரு மிகச்சிறந்த ரத்தினத்தை ஜலாலுதீன் பறித்துக்கொன்டதும், மாமனார் என்றும் பாராமல் அவனை கொன்று தான் சுல்தான் ஆவது அவன் எதையும் செய்தத் தயங்காதவன் என்பதை காட்டுகிறது. மிகச்சிறந்தவை எல்லாம் தனதாக இருக்கவேண்டும் என்பதே அவன் பேரவா.

படம் முழுக்க வியாபித்து இருப்பது அலாவுதீன் கில்ஜிதான். பத்மாவதியும் அவள் கணவன் ரதன் சிங்கும் துணை கதாபத்திரங்களாகவே தோன்றுகிறது. பத்மாவத் என்பதற்கு பதிலாக அலாவுதீனின் தோல்வி என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தால் பொருத்தமாகவும் சர்ச்சைகளெல்லாம் இல்லாமலும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பாஹுபலி-2-வில் இளவரசி தேவசேன அறிமுகம் ஆகும் காட்சியை ஒப்பிட்டால் இளவரசி பத்மாவதியின் அறிமுக காட்சி சாதாரணமாகவே தோன்றுகிறது. அடிபட்ட ரதன் சிங் காயம் குணமாகி நாடு திரும்புவதாக சொல்லும்போது பத்மாவதி அவன் மார்பில் கத்தியால் கீரிவிட்டு உனக்கு இன்னும் காயம் ஆறவில்லை என்று சொல்லி அவள் காதலை சொல்லாமல் சொல்வது அழகு.


மன்னன் ராஜகுருவை சிறையில் அடைக்கச் சொல்லும்போது, சிறந்த அறிவாளியாக சொல்லப்படும் பத்மாவதி, ராஜகுருவை நாடு கடத்தச் சொல்வது முரண்பாடாக தெரிகிறது. நாடு கடத்தப்பட்ட ஒருவன் நாட்டிற்கு எதிராக வேலை செய்வது மிகச்சுலபம் என்பது அவளுக்கு தெரியாதா என்ன.

ரதன் சிங் நேர்மையானவனாக நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக இருப்பது சரி. அதற்காக எந்த விதிகளையும் பின்பற்றாத எதிரியான முரடன் அலாவுதீனிடம் கூட அப்படி இருப்பது, ரதன் சிங் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறானே என்று நாம் வருத்தப்படும்படி உள்ளது.


அலாவுதீன் கோட்டையை முற்றுகையிட்டு அதன்மீது நெருப்புப் பந்தங்களை இயந்திரம் மூலம் வீசும்போது, மேவாத் நாட்டு படைத்தலைவர்கள், இது என்ன புது விதமான ஆயுதம் கொண்டு தாக்குகிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். அரசனின் உளவுப்படை எதிரியிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றி தகவல் தராமல் இருந்திருப்பார்களா என்ன.

இறுதியில் ரதன் சிங்கும் அலாவுதீனும் நேருக்கு நேர் சண்டையிடும்பொது, அலாவுதீனின் அடிமை மாலிக் கபூர் தன் எஜமானனை காக்க ரதன் சிங் மேல் அம்பு எய்கிறான். ஆனால், எதிரே நின்று பார்த்துக்கொண்டு இருக்கும் ரதன் சிங்கின் படைத் தலைவர்களோ ஒன்றும் செய்யாமல், குறைந்த பட்சம் ரதன் சிங்கிற்கு எச்சரிக்கை கூட செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. மாலிக் கபூர்க்கு இருக்கும் எஜமான விஸ்வாசம் ரதன் சிங்கின் ஆட்களுக்கு இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.


அலாவுதீன் கில்ஜி பாத்திரத்தில்  ரண்வீர் சிங் கலக்கி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவர் உயரமும் உடற்கட்டும் அந்த கதாபாத்திரத்திற்கு கண கச்சிசிதமாக  பொருந்துகிறது. தீபிகா படுகோனேவும் ஷாஹித் கபூரும் தங்கள் பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்கவே ரதன் சிங்கின் முகம் அரச கம்பீரம் இன்றி ஒருவித சோர்வுடனும் கவலையுடனும் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. மாலிக் கபுராக வரும் ஜிம் சரப் அந்த கதாபாத்திரத்தின் கொடிய குணம், காமம், பொறாமை, குரூரம், ஏளனம் என எல்லா உணர்வுகளையும் தன் பார்வையாலேயே காண்பித்து அசத்துகிறார். 


கதை பதினான்காம் நூற்றாண்டில் நடந்தது என்பதால் உட்புற காட்சிகள் அனைத்துமே விளக்குகளும் தீப்பந்தங்களும் தரும் ஒளியில் அமைத்திருப்பது அருமை.

3-டி-யில் சிலகாட்சிகளில் மனிதர்களின் உருவம், குறிப்பாக தீபிகாவின் உருவம், இயல்பாக இல்லாமல் அனிமேஷன் செய்தது போல இருக்கிறது. 

பத்மாவதியையோ ராஜபுத்திரர்களையோ சிறுமை படுத்துவதுபோல எந்த காட்சியும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பத்மாவதி மற்ற பெண்களுடன் சேர்ந்து கூமர் நடனம்  ஆடுவதுதான் பிரச்சினை என்றால், அந்த பாடல் வரும்போது, உண்மையில் அரசிகள் இப்படி நடனம் ஆடமாட்டார்கள், படத்திற்காகவே இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு அறிவிப்பு போட்டு பிரச்னையை முடித்திருக்கலாம். இதற்கான போராட்டங்கள் சற்று அதிகப்படியாகவே தோன்றுகிறது.


மொத்தத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ஒரு படம். தயாரிக்கப்பட்ட விதத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

படங்கள் தந்து உதவியது: கூகுள்