Saturday, June 16, 2018

மனமகிழ் பயணம் - 1

கடந்த மாதம், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைத்து எங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். திடீர் முடிவு என்பதாலும், விடுமுறைக் காலம் என்பதாலும் அருகிலுள்ள எந்த இடம் செல்ல நினைத்தாலும், ரயில், விமானம் என எதிலும் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. மேலும் அங்கே விடுதி அறைகளுக்கும் யானை விலை கொடுக்கும்படி இருந்தது.

ஒரு வழியாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்ல முடிவு செய்தேன். அங்கே இருக்கும் எங்கள் அலுவலக விருந்தினர் விடுதியில் தங்க இடம் கிடைத்ததால் இந்த முடிவு. ஷில்லாங் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. கொல்கத்தா சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்லலாம் அல்லது அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாடி சென்று அங்கிருந்து சாலை வழியாக செல்லலாம்.

கல்கத்தா ஷில்லாங் விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் குவஹாடி வழியாக செல்லவேண்டிய நிர்பந்தம். குவஹாடி செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், குவஹாடியில் எங்கே தங்குவது என்று சிந்தனை மேலோங்கியது. காரணம், அங்கே ஓரிரு நாட்கள் தங்கி அங்குள்ள இடங்களையும் சுற்றிப்பார்க்க விரும்பியதால். 

சில இணையதளங்களில் என் செலவு வரம்புக்குள் விடுதி அறைகள் கிடைத்தாலும், அவற்றை பற்றி பயனாளர் கருத்துக்களை பார்த்தபோது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றே தோன்றியது. இறுதியாக அஸ்ஸாம் சுற்றுலா துறையின் ஹோட்டலை தொடர்பு கொண்டபோது இடம் இருப்பதாக சொன்னார்கள். உடனே முன்பதிவு செய்தேன்.

கிளம்பும் நாளும் வந்தது. தில்லியிலிருந்து விமானம் மூலம் குவஹாடி சென்றடைந்தோம். குவஹாடி விமான நிலைய கட்டடம் பெருநகரங்களில் உள்ள ஒரு சிறிய மால் அளவிற்கே இருக்கிறது. வெளியேயும் விமான நிலையத்திற்கே உரிய பகட்டு எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாகவே உள்ளது. 

விமான நிலையத்தின் வருகை பகுதியில் அஸ்ஸாமின் கலை கலாசாரம் மற்றும் அதன் சிறப்பம்சமான காண்டாமிருகம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்கள். அவற்றை பற்றிய குறிப்புகளும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.



குவஹாடி விமான நிலையம் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்த ப்ரீ-பெய்டு டாக்ஸி பூத்தில் பார்த்தல், நகருக்கு செல்ல ரூ.550/- கட்டணம் என்று இருந்தது. ஒலா-வில் முயற்சி செய்து பார்த்ததில் நானூறு ரூபாய் சொச்சத்திற்கு வண்டி கிடைத்தது. பதிவு செய்துவிட்டு ஓட்டுனரை தொடர்பு கொண்டால், அவர் நான் செல்லுமிடம் வரமுடியாது என்று கூறி பதிவை ரத்து செய்துகொள்ளுமாறு சொன்னார். 

ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நினைத்தவாறே வேறு வழியில்லாமல் ப்ரீ-பெய்டு டாக்ஸியில் விடுதிக்கு சென்றோம். குவஹாடியில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தாலும் நாங்கள் சென்றது மதிய நேரம் என்பதால் சுள்ளென்ற வெயில். வண்டியும் நான்-ஏசி என்பதால் அஸ்ஸாமின் வெயிலை அனுபவித்தவாறே விடுதி சென்றடைந்தோம்.

பயணம் தொடரும் ...

8 comments:

  1. பயணத்தில் நானும் வருகிறேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. பயணத்தில் நீங்களும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. வாவ்.... அசாம், மேகாலயா பயணமா? அழகான இடங்கள். நானும் சென்றிருக்கிறேன்.

    உங்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கம் கருத்திற்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete
  3. Replies
    1. வாங்க ஸ்ரீராம். வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  4. வெங்கட் நாகராஜ் எக்ஸ்டென்சிவாக பயணம் மேற்கொள்ளுபவர் முன்பே தெரிந்திருந்தால் அவரும் ப்லான் செய்ய உதவி இருக்கலாமோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி GMB ஐயா.

      Delete