Saturday, September 08, 2018

புதுப்புது அர்த்தங்கள்

என்னுடன் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ஆரம்ப காலத்தில் எல்லாரும் வெவ்வேறு இடங்களில் பணியில் இருந்தாலும், காலப்போக்கில் இட மாறுதல் பெற்றதில், நானும் ஒரு சில பெண்களும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினோம். 

அவர்களில் இருவர் மிக நெருங்கிய இணைபிரியா தோழிகள். அவர்களின் பெயர் நீலா, மாலா என்று வைத்துக்கொள்வோம். நீலா மாலாவை விட வயதில் பெரியவர். கல்யாணம் ஆகாதவர். நாங்கள் ஒன்றாக பணியாற்றிய காலத்தில்தான் மாலாவிற்கு திருமணம் ஆகி வெளியூர் சென்றார். இருவரும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். கைபேசிகள் பெரிய அளவில் புழக்கத்தில் வராத காலம் அது.

அலுவலகத்தில் நான், தோழி நீலா, மற்றொரு தோழி ஷீலா, மூவரும் ஒரே உட்பிரிவில் வேலை செய்தோம். எங்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம் இல்லை என்பதால் எப்போதுமே எங்கள் உட்பிரிவு கலகலப்பாக இருக்கும்.

பட உதவி: கூகுள் 
ஒருநாள், நீலா இயல்புக்கு மாறாக சோகமாக காணப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லாததால், நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். எங்களுக்குள் நடந்த உரையாடல்:

நான்: என்ன ஆச்சு? ஏன் காலையிலிருந்து இப்படி (D)டல்லா இருக்கீங்க?

நீலா: நேத்து சாயந்திரம் மாலாவோட பேசலாம்னு போன் பண்ணினேன். அவ என்னடான்னா என் வீட்டுக்காரர் வீட்ல இருக்காரு, எனக்கும் நெறைய வேலை இருக்கு. அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டா.

நான்: அதனாலென்ன? அவங்களுக்கு வீட்டு வேலை இருந்திருக்கும். இதுக்கு போயா இவ்வளவு பீலிங்?

நீலா: எத்தனை வாட்டி நான் வேலையா இருக்கும்போது அவ போன் பண்ணியிருக்கா தெரியுமா? ஒருவாட்டி கூட நான் இதுபோல சொன்னதில்ல. 

நான்: அதெல்லாம் அந்தந்த ஸிச்சுவேஷனண பொருத்தது. அதுக்காக ஏன் அவங்க சொன்னத தப்பா எடுத்துக்கறீங்க?

நீலா: நான் தான், க்ளோஸ் பிரெண்டுனு அவளுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் குடுக்கறேன். ஆனா அவ அப்படி இல்லன்னு நேத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இத்தனை நாளா நான் எவ்வளோ இம்மெச்சூரா இருந்திருக்கேன்னு இப்பத்தான் புரியுது.

நான்: அப்படின்னா இப்ப (இந்த சம்பவத்திற்கு பிறகு) நீங்க மெச்சூர் ஆயிடீங்க.

நீலா: (அவரைப்பற்றி நான் ஏதோ குறைவாக மதிப்பிடுவதாக நினைத்து) இல்ல இல்ல. நான் எப்பவோ மெச்சூர் ஆயிட்டேன். (என மறுப்பு சொன்னார்)

அருகில் அமர்ந்திருந்த தோழி ஷீலா சட்டென்று நமுட்டு சிரிப்பு சிரிக்க, கண நேரத்தில் சுதாரித்துக்கொண்ட நீலா "நான் அதைச் சொல்லல" என்று சொல்லி ஷீலாவுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். 

பட உதவி: கூகுள் 
சிரிக்கும்படி என்ன நடந்தது. எதற்காக ஷீலா சிரிக்கிறார். நீலா எதை மறுத்து, கூட சேர்ந்து சிரிக்கிறார் என்று முதலில் எனக்கு புரியவில்லை. நான் இருவரையும் குழப்பத்துடன் பார்க்க, நீலாவின் முக (B)பாவத்திலிருந்து எனக்கு விஷயம் புரிந்தது. ஷீலாவின் குறும்பும், நீலா சட்டென்று விஷயத்தை புரிந்துகொண்டதும் என்னையும் சிரிக்கவைத்தது. ஒரு கணத்தில் எங்கள் உட்பிரிவே கலகலப்பானது. அதுவரை சோகமாக இருந்த நீலா மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தார்.

உங்களுக்கும் விஷயம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்குறிப்பை படிக்கவும். 

இந்த சம்பவத்தைப்பற்றி பிற்பாடு யோசித்தபோது நீலாவின் வருத்ததிற்கு காரணம், மாலா இவருடன் பேசாதது அல்ல, மாறாக, அவர் பேசியதில், கணவர் வீட்டில் இருக்கிறார் என்ற வாக்கியம் இவர் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் தான் என்று தோன்றியது. 

அந்த வாக்கியத்தின் மூலம், உனக்கு கல்யாணம் ஆகவில்லை. அதனால் அதிக வேலை இல்லை. ஆகவே உனக்கு பேச நேரம் இருக்கிறது. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதனால்  வேலை அதிகம் இருப்பதால் பேச நேரம் இல்லை என மாலா மறைமுகமாக சொல்வதாக தவறாக புரிந்து கொண்டிருபார் போலும். அது அவர் ஆழ்மனதில்தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தையோ சுயபச்சாதாபத்தையோ  ஏற்படுத்தியிருக்கவேண்டும். 

அதுவே, அவர் மாலாவின்மேல் கோபமும் வருத்தமும் கொள்வதற்கு காரணமாக எனக்கு தோன்றியது.

அதன் பிறகு சில மாதங்களில் நீலாவிற்கும் கல்யாணம் ஆனது. 

பின்குறிப்பு: நாங்கள் இருவரும் மெச்சூர் என்ற ஆங்கில வார்த்தையை அறிவு முதிர்ச்சி என்ற அர்த்தத்தில் பேசிக்கொண்டிருக்க, ஷீலாவோ, "நான் எப்பவோ மெச்சூர் ஆயிட்டேன்" என்று நீலா சொன்னதை சிலேடையாக கொண்டு, பெண்கள் பருவம் அடைதலை குறிக்கும் பேச்சு வழக்கு அர்த்தத்தை எடுத்துக்கொண்டு சிரித்தார். நீலா உடனடியாக அதை புரிந்துகொண்டு நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுத்து அவருடன் சேர்ந்து சிரித்தார்.

Sunday, September 02, 2018

தாயும் மகளும் பின்னே ஓர் மிதிவண்டியும்

பட உதவி: கூகுல் 


சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்தபோது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கள் சாலைக்குள் திரும்பியபோது எதிரில் ஒரு தாயும் மகளும் வந்துகொண்டிருந்தனர். மகள் பதின்ம வயதுகளின் இறுதியில் இருப்பதாக தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பாள் போலும். மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வந்தாள். 


நான் அவர்களை கடக்கும்போதுதான் அந்த தாய் ஏதோ ஒரு வாக்கியத்தை பேசி முடித்தார். அநேகமாக ஏதோ குடும்பப் பிரச்சினை பற்றியோ அல்லது தனது தனிப்பட்ட கஷ்டத்தையோ மகளிடம் பகிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அந்த மகள் “just go with the flow ma” என்று ஆறுதலும் தைரியமும் தந்துகொண்டிருந்தாள். 


இந்த காட்சியும் உரையாடலும் நான் அவர்களை கடக்க எடுத்துக்கொண்ட ஓரு சில நொடிகளில் கவனித்ததுதான் என்றாலும், தாய் தன் பதின்ம வயது மகளிடம் வெளிப்படையாக ஒரு பிரச்சனையை விவாதிப்பதும் அதை அந்த இளம்பெண் புரிந்துகொண்டு முதிர்ச்சியுடன் ஆறுதலான பதில் தந்ததை கேட்டதும் எனக்கு ஏதோ ஒரு வித மன நிறைவை தந்தது.


எல்லா குடும்பங்களிலும் இப்படிப்பட்ட விஷயம் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடக்கவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். இன்றைய பெற்றோர் குடும்ப கஷ்டங்களையோ, குடும்பத்திற்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் படும் அவஸ்தைகளையோ அல்லது தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளையோ குழந்தைகளிடம் சொல்லவதில்லை.


இன்றைய கீழ்தட்டு நடுதட்டு பெற்றோர்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள ஒரு புது மனோபாவம் இது. இன்றைய தாத்தா பாட்டிகளோ அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுரையினரோ யாரும் அப்படி யோசித்ததாக தெரியவில்லை. கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கை என்னவென்று புரியும் என்ற தத்துவத்தை அவர்கள் பின்பற்றினர்.


பிள்ளைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் இந்த புது சித்தாந்தத்தால், அவர்களுக்கு கஷ்டங்கள் என்றால் என்னவென்றே தெறியாமல் ஒரு மாய உலகில் வளர்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கும் அவற்றை தீர்ப்பதற்கும் மிகவும் பயப்படுகிறார்கள். அதனால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து போக முனைகிறார்கள் அல்லது அவற்றை சமாளிக்க எப்போதும் யாரவது ஒருவர் துணையை அல்லது தயவை எதிர்பார்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.


சிறு வயதிலிருந்தே குடும்ப கஷ்டங்களை புரிந்துகொண்டும் அவற்றை பெற்றோர் சமாளிப்பதையும் பார்த்தும் வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் யதார்த்தத்தோடு இயைந்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய சூழ்நிலையை குழந்தைகளுக்கு உருவாக்குவது பெற்றோரின் கை(வாய்)களில்தான் இருக்கிறது. ஏனென்றால் அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.


Sunday, August 26, 2018

மனமகிழ் பயணம் - 3

நவகிரஹ கோயில் & உமா நந்தா கோயில் 


முந்தைய பகுதிகள்: பகுதி-1   பகுதி-2

அடுத்த நாள் காலை சுமார் எட்டரை மணி அளவில் விடுதியிலிருந்து புறப்பட்டோம். உபெர் டாக்ஸி பிடித்து முதல் இடமாக குவஹாடியின் நவக்ரஹ கோயிலுக்கு சென்றோம். இந்த கோயில் பிரமபுத்திரா நதிக்கரையில் உள்ள சித்ரசால் மலை எனும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. கோயிலின் வாசல் வரை வண்டி செல்லும் வசதி இருக்கிறது. 


நவகிரஹ கோயில் 

கோயில் வட்ட வடிவில் உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தால் ஒரு சிறு கூடம். அடுத்து கருவறை. கருவரைக்குள்ளே சென்றுதான் நவக்கிரககங்களை தரிசிக்கவேண்டும். இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால், நம்ம ஊர் கோயில்களில் இருப்பதுபோல் அல்லாமல் நவகிரகங்களும் லிங்க வடிவில் உள்ளன. நடுவில் சூரியனை குறிக்கும் ஒரு லிங்கமும் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களை குறிக்கும் லிங்கங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக பூசாரிகள் இருக்கிறார்கள். பூஜை செய்பவர்களை லிங்கத்தின் அருகிலேயே அமரவைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். உள்ளே மின்விளக்குகள் எதுவும் இல்லை. தீபஒளியில் தான் தரிசனம் செய்யவேண்டும். அதனால் கோயிலின் உள்ளே இருட்டாகவே இருக்கிறது. 


கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. உள்ளே இருக்கும் ஒரே கடையில் 200 மி.லி. நல்லெண்ணெய் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. இரண்டு புட்டி எண்ணெய் வாங்கி விளக்கில் விட்டோம். கோயிலை சுற்றி வரும்போது ஒருபுறம் குவஹாடி நகரமும் மறுபுறம் பிரம்மபுத்ரா நதியும் அழகான காட்சிகளாக கண்முன்னே விரிகின்றன. 


நவகிரஹ கோயிலிலிருந்து குவஹாடி நகரம் 

தரிசனம் முடித்து வெளியே வந்து ஓலா டாக்ஸி புக் செய்து காத்திருந்தால், வண்டி வருவதாக தெரியவில்லை. ஓட்டுனரை அழைத்து பேசினால், அவர் இருக்கும் இடத்திலிருந்து கோயில் தூரம் என்று கூறி வர மறுத்துவிட்டார். போனால் போகட்டும் போடா என்று எண்ணிக்கொண்டு அங்கேயே இருந்த ஒரு ஆட்டோ பிடித்தோம். சென்னையைப் போலவே இங்கும் ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டும் பழக்கம் இல்லை. நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நூறு ருபாய் கேட்டார். ஒலாவிலும் அதே பணம் கட்டியதால், பேரம் பேசாமல் புறப்பட்டோம். 


அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் உமா நந்தா கோயில். இது ஒரு அழகான சிவன் கோயில். பிரம்மபுத்ரா ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த கோயில். கோயிலை அடைய படகுப்பயணம் செய்ய வேண்டும். இரண்டு படகுத்துறைகளில் இருந்து அந்த கோயிலுக்கு படகுகள் செல்கின்றன. ஒன்று உமாநந்தா காட் எனப்படும் அரசு படகுத்துறை. மற்றொன்று தனியார் படகுத்துறை. இரண்டும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. அரசு படகுத்துறை உசான் பஜார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 


உமா நந்தா படகுத்துறை 

படகு சவாரி பயணச்சீட்டு தலைக்கு 20 ருபாய். இது இருவழி பயணத்துக்கான கட்டணம். தனியார் படகுகள் மிக அதிகமாக வசூலிப்பதாக இணையத்தில் சிலர் எழுதியிருந்தார்கள். 5 நிமிட படகு பயணத்தில் கோயிலை அடைந்தோம். 



பிரம்மபுத்ரா நதியின் நடுவில் உமா நந்தா கோயில் இருக்கும் மயில் தீவு

மரங்கள் நிறைந்த அழகான சிறு தீவுக்குன்று அது. தீவின் பெயர் மயில் தீவு (Peacock Island). இந்த தீவிற்கு ஒரு சிறப்பும் உண்டு. உலகிலேயே, மனிதர்கள் வாழும் மிகச்சிறிய ஆற்று தீவு இது. அடிவாரத்தில் இருந்து சுமார் 50-60 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் பிள்ளையார் சந்நதி. சன்னதிக்கு வெளியே ஒரு பெரிய எலி சிலை. மூலவரான சிவன் சன்னதியில் கருவறை பள்ளத்தில் அமைந்துள்ளது. சில படிகள் இறங்கி கருவறைக்குள் செல்லலாம். பக்தர்களை லிங்கத்தின் அருகிலேயே அமரவைத்து தரிசிக்க வைக்கிறார்கள். 


படிகளின் முடிவில் தெரிவது உமா நந்தா கோயில்

இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் இடதுபுறம் செல்லும் ஒரு சரிவில் சென்றால் அங்கே ஒரு ஹனுமார் கோயில் உள்ளது. இந்த தீவிலும் கோவிலுக்கு செல்லும் வழியில் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. தரிசனம் முடித்து மலையை விட்டு இறங்கினால் வந்த படகிலேயே திரும்பிச் செல்லலாம். அடிவாரத்தில் இளநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் உள்ளன. 


தீவின் கரையில் காத்திருக்கும் தனியார் படகுகள்

தரிசனம் முடித்து கரை திரும்புகையில் சூரியன் தலைக்கு மேல் வந்திருந்தார். வயிற்றில் அலாரம்  அடிக்க ஆரம்பித்ததால்  கூகுள் மேப்ஸ்-ல் அருகில் உள்ள சைவ உணவகங்களை தேடினேன். அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு உணவகத்தை காட்டியது அது. JBs என்ற அந்த உணவகத்தில் தென்னிந்திய உணவு வகைகளும் கிடைக்கின்றன. ஆர்டர் செய்த உணவுகளை கொண்டுவர அறை மணி நேரத்திற்கு மேல் ஆனது. சாப்பிட்டு முடித்து உபெர் டாக்ஸி அமர்த்திக்கொண்டு விடுதிக்கு வந்து சேர்ந்தோம். 


பயணம் தொடரும்...

Thursday, August 09, 2018

வடக்கும் தெற்கும்

சில நாட்களுக்கு முன் சக அதிகரி ஒருவரின் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. அவர் பாலக்காட்டு தமிழர். எங்கள் அலுவலகத்தின் அருகில் இருக்கும் அரசு குடியிருப்பில்தான் வசிக்கிறார். அன்று வேலை நாள் என்பதால் எங்களை மதிய உணவிற்கு அழைத்திருந்தார். நாங்களும் சென்றிருந்தோம். 

தினமும் எங்கள் விருந்தினர் இல்ல சாப்பாட்டை சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்த நாக்கிற்கு நல்ல தரமான சுவையான விருந்து கிடைத்தது. ஜாங்கிரி, பால் பாயசம், புளியோதரை, அவியல், சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு கார கறி, பீன்ஸ் கறி, அப்பளம், தயிர் பச்சடி  என அருமையான விருந்து. பரிமாறியவர் ஒரு நேபாளி. நண்பரிடம் சமையல் காண்ட்ராக்ட்டர் யார் என்று விசாரித்தேன்.

அவர் கும்பகோணத்தை சேர்ந்தவராம். முப்பது வருடங்களாக தில்லியில் வசிக்கிறாராம். ஆனால் விழா சமயத்தில் அவர் தில்லியில் இல்லையாம். சமைத்தது அவருடைய நேபாளி உதவியாளர்கள் தானாம். அதை கேட்டதும் அசந்துபோனேன். காரணம், உணவு அச்சு அசல் நம்ம ஊர் கைமணத்தில் இருந்தது. நம்ம  ஊர் சமையலை கற்று அவ்வளவு அருமையாக சமைத்த அந்த நேபாளி சமையல்காரரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

================================================================================================================

இளம் விற்பனை பிரதிநிதி ஒருவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தார். தன் நிறுவன தயாரிப்புகள் பற்றி  விலாவாரியாக என்னிடம் சொல்லிகொண்டிருந்தார். வேலை அதிகம் இருந்ததால், தேவைப்படும்போது அவர்களை அணுகுவதாக சொல்லி அவரை கழற்றிவிட முயற்சித்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை.

நீங்கள் தென்னிந்தியரா என்றார். ஆமாம் என்றதும் சமீபத்தில் திறக்கப்பட்ட கே.ஆர்.எஸ்., கபினி, மேட்டூர் அணைகளை மிஞ்சும் அளவிற்கு அவர் பேச்சு பிரவாகமாய் பாயத் தொடங்கியது.

அந்த இளைஞர் பீகார்காரராம். கடந்த ஆண்டு எம்.பீ.ஏ. முடித்து சில மாதங்களுக்கு முன்தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாராம். அவர் எம்.பீ.ஏ. படித்தது பெங்களுருவிலாம். தென்னகத்து மனிதர்கள், உணவு, வசதிகள், சுத்தம் எல்லாம் அவரை மிகவும் கவர்ந்துவிட்டனவாம். தென்னாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கேற்ப கேம்பஸ் செலக்ஷன்-ல் வேலையும் கிடைத்ததாம். 

ஆனால் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் மதிப்பெண் பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் தராததால் அவரால் அந்த வேலையில் சேர முடியவில்லையாம். வேறு வழியில்லாமல் தில்லி வந்து வேலைக்கு சேர நேர்ந்ததாக சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தேன்.

Thursday, July 19, 2018

பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி

வாட்ஸாப்பில் வந்த இந்த பதிவு அற்புதமாக எழுதப்பட்டுள்ளதால் யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
====================================================================================================================

நம்மள போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான எவனோ எழுதியிருக்கான். ஆனா செம!

உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜமா?????

காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணி நேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.

விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று செர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல.

கக்கா போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உடகாராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில் துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.

“அட நிம்மதியா காலைகடன் கழிக்க கூட விடமாட்டீங்களா”என்றால் “உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார் “அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங்கன்னா கிருமிகள் எல்லாம் செத்துரும் நாள் முழுக்க கக்கூஸ் நல்லா இருக்கும்” என்கிறார்.

“யோவ் நான் என்னய்யா நாள்முழுக்க கக்கூசுலயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “ சார் ஸ்மார்ட் கக்குஸ் ஸ்மாட்டஸ்ட் கக்கூசர்”என்கிற காண்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்ற படி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.

“யோவ் வெளிநாடு போகிறது இருக்கட்டும் நான் முதல்ல வெளிக்கி போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை சாத்தவேண்டி இருந்திச்சு.

ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “ சார் பாருங்க உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா வந்திருக்கிறேன்”என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.*

“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்ல இல்ல அப்போ எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.

வேண்டாம் விட்டுடங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்க்றார். “யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்,

அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை மூக்குக்கு நீட்டுகிறார்.


“இந்தாம்மா இந்த பத்து படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பிள குளிக்கிற இடத்துல உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.

“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக்களைய இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப்பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.

“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க போல”ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ணு ஆயிடிச்சு.

நிம்மதியா சப்பிடலாம்ணு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.

பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவி கிட்ட கேக்குறா“பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”. என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில்,

“உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும். பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.*

“அட நிம்மதியா சப்பிடவும் விட மாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா? எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”*

“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “ இரும்பு சத்து சார் இரும்பு சத்து” என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,

அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான்.

அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன்”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டை தான்யா” என்கிறேன்.

அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.

”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா என்ன ஆச்சு” என்றால் “தரையெல்லாம் கிருமிகள் சார்.

எங்க ஃப்லோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்னிடும். காலை தூக்குங்க சார்” என்ற படி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.

”கண்னுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.

காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில கிருமி நடக்குற தரையிலும் கிருமி உட்காந்த கிருமி உட்காருற இடத்திலயும் கிருமி முகத்தை தொடச்சா கிருமி சாப்பிட்டா கிருமி சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி வெளியில போனா கிருமி உள்ள வந்தா கிருமி மண்டைல கிருமி தொண்டையில கிருமி வாயில கிருமி வாசலில கிருமி துணியில கிருமி தும்மினா கிருமி தூங்கினா கட்டில்ல கிருமி தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.

“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டு இருக்கானுங்க மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகள் வாழ்ந்திட்டு இருக்கு.

அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும் இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க.

ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப்பார்த்தன் அவள் சொன்னாள் “

கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம் ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.

இப்போதான் நானும் என் மனைவியும் குழந்தைகளும் கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.
====================================================================================================================

Wednesday, July 11, 2018

அப்பாவியின் அனுபவம் - 2

அரசுப்பணி கிடைத்தவுடன் நான் முதன்முதலாக பணியமர்த்தப்பட்ட இடமானது பத்து நிமிட நடையில் விமான நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம், பன்னாட்டு நிறுவனங்கள், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், மால்கள், 1000 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீட்டர் தூரம், சென்னைக்கு மிக மிக அருகில் மற்றும் இத்யாதிகள் என்று எந்த அடைமொழிகளும் இல்லாத, ரயில் மற்றும் பேருந்து நிலையம் மட்டுமே உள்ள சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊராகும்.


உலக வழக்கப்படி மற்ற எல்லோரையும் போல நானும் என் மூத்த சகாக்களின் அறிவுரைப்படி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சென்னைக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். முதல் நாளே துண்டு போட்டு இடம் பிடிக்கக் காரணம் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில்தான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பணியிட மாறுதல் கிடைக்கும்.


இடமாற்றம் கிடைக்க எப்படியும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அப்பாவி, தினமும்  மாங்கு மாங்கென்று சென்னையிலிருந்து வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தேன்.



வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் கழித்து ஒருநாள் கண்காணிப்பாளர் எங்கள் அலுவலகத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் தன் பணி முடிந்தவுடன் நாங்கள் பணி செய்துகொண்டிருந்த பகுதிக்கு வந்து இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவர்களை பார்த்தபடி மெதுவாக நடக்கும் அந்நிய நாட்டு தலைவர் போல எங்களை எல்லாம் பார்த்தபடி நிதானமாக நடந்தார்.


என் அருகில் வந்ததும்,

"நீங்க சென்னைக்காரரா?" என்றார்.

"ஆமாம் சார்"

"நீங்க டிரான்ஸ்பர் ரிக்வெஸ்ட் தந்திருக்கீங்களா?"

"ஆமாம் சார்.  கொடுத்திருக்கேன்"

"சென்னையிலிருந்து தினமும் வந்துட்டு போரீங்களா?

"ஆமாம் சார்"

அவருக்கு அறிமுகம் இல்லாத என்னிடம் இவ்வாறு நேரடியாக மாறுதல் பற்றி பேசியதும் மிதமான வெயிலும் சில்லென்ற தூரலும் கலந்து பிரசவித்த வானவில்லை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை உணர்ந்தேன். ஆஹா! மிக அக்கறையாக விசாரிக்கிறாரே. மற்றவர்கள் சொன்னதுபோல் ஆண்டுகள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை போலும். ஏதாவது ஏற்பாடு செய்து நமக்கு உடனே மாற்றல் தருவார் போலிருக்கிறது என்று தோன்றியது.

காரணம், அந்த கால கட்டத்தில்தான் சென்னையில் இருந்த எங்கள் துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பெரிய அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். சீனியர்கள் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் நாட்டமும் அனுபவமும் இல்லாததால் என்னைப்போன்ற இளைஞர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைப்போன்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதாவது வேலைக்காக என்னை அழைப்பர்களோ என்ற எண்ணம் எழுந்தது.

தனி அறையில்  ஹீரோ ஹீரோயினை நெருங்கும்போது தடங்கலாக தட் தட் தட்னு யாராவது கதவு தட்டுவாங்களே, அதைப்போல என் எண்ணங்களுக்கு தடங்கலாக ஏதோ ஒரு கேள்வி  கேட்கப்பட்டது காதில் விழுந்தது. முதலில் அது சரியாக புரியவில்லை. பிறகுதான் ஊசியிலிருந்து மருந்து மெதுவாக உடம்புக்குள் இறங்குவதுபோல் என்ன கேட்கப்பட்டது என்பது மண்டைக்குள் இறங்கியது.

கேட்டது அந்த அதிகாரிதான். கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.

"நீங்க தினமும் சென்னையிலிருந்து வந்து போறீங்களே, அதுக்கு துறையிலிருந்து அனுமதி வாங்கியிருக்கீங்களா?"

கேட்கப்பட்டது முழுவதும் மண்டைக்குள் இறங்கியவுடன் நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அப்படி எந்த அனுமதியும் நான் பெறாததுதான். அதனால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமோ என்று வேறு பயம் கவ்விக்கொண்டது.

கமரக்கட்டு கிடைக்கும் என்று ஆசையாய் காத்திருக்கும்போது கண்களை கட்டி கடத்திச்சசெல்லப்பட்ட குழந்தையின் நிலை போல இருந்தது அப்போதைய என் நிலை. என் இடத்தில் வடிவேலு இருந்திருந்தால், "ஆட்டோல ஏத்தி விட்டாங்க. வீட்டுக்குத்தான் அனுப்புராங்கானு நம்பி ஏறினா அது நேரா ஒரு மூத்தர சந்துக்குள்ள போய் விட்டுச்சி" என்று கிரி பட வசனத்தை பேசியிருப்பார்.

அரசு ஊழியர் அவர் பணியமர்த்தப்பட்ட ஊரில்தான் குடியிருக்க வேண்டும் என்பது அரசுப்பணி விதி. அப்படி ஒருவேளை அவர் வேறு ஊரில் வசிக்க நேர்ந்தால் அதற்கு துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். வேலைக்கு சேர்ந்த புதிது என்பதால் பச்சப்புள்ளயா இருந்த எனக்கு அது தெரியாமல் போனது  என் தலைவிதி.

திடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் "இல்ல சார்" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.

கூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.

நல்லா கெளப்பராங்கைய்யா பீதிய!

Monday, July 02, 2018

மனமகிழ் பயணம் - 2

பகுதி 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்.


மதியம் சுமார் இரண்டு மணிக்கு விடுதியை சென்றடைந்தோம். அந்த விடுதி குவஹாடி ரயில் நிலைய சாலையில் அமைந்திருந்தது. எல்லாருக்கும் பசி. ஏற்கனவே ஒருமணி நேரம் வெயிலில் பயணித்து வந்திருந்ததால் மீண்டும் வெளியில் எங்கும் சென்று சாப்பிட யாரும் விரும்பவில்லை. விடுதியிலேயே உணவகம் உண்டென்றாலும் அங்கே அசைவமும் உண்டு என்பதால் கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளில் சிலவற்றை உண்டு ஓய்வெடுத்தோம். 

அதற்குள் சுற்றிப்பார்க்க இடங்கள் ஏதாவது அருகில் இருக்கின்றனவா என்று நான் கூகுள் மேப்ஸ்-ல் தேடினேன். அரசு அருங்காட்சியகம் அருகில் இருப்பதாக அது காட்டியது. சுமார் நான்கு மணிக்கு புறப்பட்டோம். விடுதியின் வரவேற்பில் விசாரித்ததில் நடந்து செல்லும் தூரத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது என்று சொன்னார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கே இருந்தோம்.
 
அருங்காட்சியக கட்டடம்
அருங்காட்சியகம் அந்த கட்டடத்தின் 3 தளங்களில் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5/- சிறுவர்களுக்கு ரூ.2/-. உள்ளே சென்றதும் முதலில் அவர்கள் முதல் தளத்திற்கு செல்லுமாறு வழிகாட்டினார்கள். அங்கே ஒரு அறையில்  அஸ்ஸாமிய ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களும், மற்றொரு அறையில் அஸ்ஸாமிய தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பல அறிய புகைப்படங்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று, மகாத்மா காந்திஜி தமிழில் எழுதிய கடிததின் ஒரு பகுதி. அதில் அவர் “நீரில் எழுத்தொக்கும் யாக்கை” என்று எழுதி ம.க.காந்தி என்று கையொப்பமிட்டுள்ளார். அதை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தது அங்கிருந்து இரண்டாம் தளத்திற்கு சென்றோம். அங்கே அஸ்ஸாமிய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை காட்சிப்படுத்தும் விதமாக உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினைப்பொருட்கள், இசைக் கருவிகள், இன்னபிற என பல பொருட்களும், அவர்களின் ஒரு கிராமத்து வீட்டின் மாதிரியும் வைத்திருந்தார்கள்.



நடராஜர், துர்க்கை மற்றும் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட சிவன் உருவம்.

இறுதியாக தரை தளத்திற்கு வந்தோம். அங்கே அம்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பழைய கற்சிலைகளை ஒரு கூடத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல பழைய நடராஜர் சிலைகள் இருந்தன. நடராஜர் தமிழ்நாட்டில் மட்டுமே பூஜிக்கப்படும் சிவனின் ரூபம் என்ற பொதுக்கருத்தை பொய்யக்குவதாக அது இருந்தது. மற்றொரு அறையில் அவர்களின் அரசர் காலத்து நாணயங்களை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அருங்காட்சியகத்தின் எல்லா அரங்குகளிலும் வெளிச்சம் குறைவான விளக்குகளே வைத்துள்ளனர். உள்ளே எடுக்கப்படும் படங்கள் பிளாஷ் உபயோகிக்காமல் எடுக்கப்படவேண்டும் என்று அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். அதனால் அங்கே படம் எடுக்க நாட்டம் இல்லாமல் இருந்தது. எடுக்கப்பட சில படங்களும் பளிச்சென்று இல்லை. எல்லாம் பார்த்து முடித்து நாங்கள் வெளியே வருவதற்கும் அருங்காட்சியகம் மூடப்படுவதற்கும் சரியாக இருந்தது.



மாலை ஆறு மணி. அடுத்தது எங்கே செல்லலாம் என யோசித்துக்கொண்டு இருக்கையில், அருங்காட்சியககத்திற்கு எதிரிலேயே எரியோடு ஒட்டிய ஒரு சிறிய பூங்கா இருந்தது. அந்த ஏரியின் பெயர் திகாலிபுகுரி. இங்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு ரூ.10/-, சிறுவர்களுக்கு ரூ.5/-.

டயர்களின் இடுக்குகளில் வளர்க்கப்படும் செடிகள் 

மூங்கில் குழல்களில் வளர்க்கப்படும் செடிகள் 


ஏரியை சுற்றி நடை பாதையும் முன்புறம் சிறுவர் விளையாட்டு திடலும் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றபோது சில சிறுமிகள் துடுப்புப் படகு செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஏரியின் பின்புறம் ராணுவ வீரர்களுக்கான ஒரு நினைவிடமும் சில போர் விமான மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. அரைமணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.

இரவு உணவுக்கு எங்கு செல்வது என சைவ உணவகங்களை கூகுள் மேப்ஸ்-ல் தேடி ரயில் நிலையத்திற்கு மறுபுறம் இருக்கும் ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்து அங்கு சென்றோம். மயூர் ஹோட்டல் எனும் விடுதியின் உணவகம் அது. செல்லும் வழியெங்கும் சாலையில் மக்கள் பான் மென்று துப்பி வைத்திருக்கிறார்கள். சாலையில் நடப்பதற்கே அருவெறுப்பாக இருந்தது.

ரயில் நிலையத்தை நடை மேம்பாலத்தில் கடந்து மறுபுறம் இறங்கினால் அது பிரதான அங்காடிப் பகுதி. அதன் பெயர் பல்டன் பஜார். எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டமும் வாகன கூட்டமும் ஒன்றை ஒன்று முன்டியடிதுக்கொண்டிருந்தன. ஒருவழியாக அந்த உணவகத்தை தேடி கண்டுபிடித்து சென்றோம். அந்த உணவகத்தில் டெபிட் கிரெடிட் கார்டுகளை ஏற்பதில்லையாம். சாப்பிட்டவுடன் மேற்பார்வையாளர் ஒருவர் வந்து எவ்வளவு ஆனது என்று சொல்லி பணம் கேட்டார். பில் கேட்டர்தர்க்கு இதோ கொண்டுவருகிறேன் என்று பணத்துடன் சென்றவர் கவுன்ட்டர் அருகில் எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருண்தார். அவர் பில் பற்றி ஏதும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அதற்குமேல் அங்கு காத்திருப்பது வீண் என்று கிளம்பிவிட்டோம். எங்கள் பயணத்தின் முதல் நாள் நல்லபடியாக முடிந்தது.

பயணம் தொடரும்...


Friday, June 22, 2018

வழிகாட்டும் கதைகள் - 2

ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை மெகா டிவியில் பட்டி மன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். பெரும்பாலும் அதில் கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளே இருக்கும். கடந்த ஞாயிரன்றும் அவ்வாறே. பட்டிமன்ற நடுவர் முனைவர் கு.ஞானசம்பந்தன். வாத பிரதிவாதங்கள் எல்லாம் முடிந்து இறுதியில் அவர் உரையாற்றும்போது சொன்ன ஒரு குட்டிக்கதை (சிறிய மாறுதல்களுடன்) உங்களுக்காக.

வெயில்காலம். மதிய நேரம். ஒரு ஏழை மனிதர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் உடுத்தியிருப்பது ஒரு வேஷ்டி மட்டுமே. வெயிலின் கொடுமை அவரை வாட்டுகிறது.

நன்றி: கூகுல் படங்கள் 

அப்போது, குதிரையின் மேல் அமர்ந்து பயணிக்கும் ஒரு ஜமீந்தார் அவரைக் கடந்து செல்கிறார். ஜமீன்தாரை பார்த்த அந்த ஏழை, "ஐயா, வெயிலில் செருப்பு இல்லாமல் நடப்பது கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் குதிரையின் மேல் அமர்ந்து செல்கிறீர்கள். உங்களுக்கு செருப்பு அவசியம் இல்லை. அதனால் உங்கள் செருப்பை எனக்கு தந்து என் மீது கருணை காட்டுங்கள்" என்று வேண்டினார்.

உடனே அந்த ஜமீன்தாரும் தனது செருப்பை ஏழைக்கு தந்தார்

"ஐயா, நான் மேலாடையின்றி இருக்கிறேன். வெயில் தாங்க முடியவில்லை. நீங்களோ நல்ல ஆடைகளை அணிந்து இருக்கிறீர்கள். பின்னால் ஒருவர் உங்களுக்கு குடை வேறு பிடித்துக்கொண்டு இருக்கிறார். அதனால் உங்கள் மேலாடையை எனக்கு தந்து உதவுங்களேன்" என்றார் ஏழை.

மேலாடையையும் கழற்றி தந்தார் ஜமீன்தார். அவர் செல்ல எத்தனிக்க, ஏழை "ஐயா, குதிரையின் மேல் பயணிப்பதால் நீங்கள் விரைவாக வீடு சென்றுவிடுவீர்கள். நானோ நடந்து செல்வதால் அதிக நேரம் ஆகும். அதனால் உங்கள் குடையையும் எனக்கு தந்தால் நன்றாயிருக்கும்", என்றார்.

குடையும் கைமாறியது.

ஜமீன்தார் புறப்பட, ஏழை "கேட்டதும் செருப்பு, மேலாடை, குடை கொடுத்த நீங்கள் உங்கள் குதிரையையும் எனக்கு கொடுத்தால் நான் மகிழ்வேன்" என்றார்.

குதிரையை விட்டு இறங்கிய ஜமீன்தார், கோபத்தில் தன்னிடம் இருந்த சாட்டையால் "இவ்வளவு பேராசையா?" என்றபடி அந்த ஏழையை அடித்தார். உடனே ஏழை, "நன்றி ஐயா, நன்றி ஐயா" என்று கத்தினார்.

குழம்பிப்போன ஜமீன்தார், "உன்னை அடிக்கும் எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்?" என்றார்.

"நீங்கள் அடிக்காமல் போயிருந்தால், நீங்கள் போன பிறகு, இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கேட்டிருந்தால் குதிரை கிடைத்திருக்குமோ என்று என்னை நானே நொந்துகொண்டு இருப்பேன். நீங்கள் அடித்ததால் இனி அந்த எண்ணம் எனக்கு வராது" என்றார் ஏழை.

எதிர்மறை அனுபவங்களும் சிலசமயம் நம் மன அமைதிக்கு வழி வகுக்கின்றன.

Saturday, June 16, 2018

மனமகிழ் பயணம் - 1

கடந்த மாதம், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைத்து எங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். திடீர் முடிவு என்பதாலும், விடுமுறைக் காலம் என்பதாலும் அருகிலுள்ள எந்த இடம் செல்ல நினைத்தாலும், ரயில், விமானம் என எதிலும் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. மேலும் அங்கே விடுதி அறைகளுக்கும் யானை விலை கொடுக்கும்படி இருந்தது.

ஒரு வழியாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்ல முடிவு செய்தேன். அங்கே இருக்கும் எங்கள் அலுவலக விருந்தினர் விடுதியில் தங்க இடம் கிடைத்ததால் இந்த முடிவு. ஷில்லாங் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. கொல்கத்தா சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்லலாம் அல்லது அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாடி சென்று அங்கிருந்து சாலை வழியாக செல்லலாம்.

கல்கத்தா ஷில்லாங் விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் குவஹாடி வழியாக செல்லவேண்டிய நிர்பந்தம். குவஹாடி செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், குவஹாடியில் எங்கே தங்குவது என்று சிந்தனை மேலோங்கியது. காரணம், அங்கே ஓரிரு நாட்கள் தங்கி அங்குள்ள இடங்களையும் சுற்றிப்பார்க்க விரும்பியதால். 

சில இணையதளங்களில் என் செலவு வரம்புக்குள் விடுதி அறைகள் கிடைத்தாலும், அவற்றை பற்றி பயனாளர் கருத்துக்களை பார்த்தபோது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றே தோன்றியது. இறுதியாக அஸ்ஸாம் சுற்றுலா துறையின் ஹோட்டலை தொடர்பு கொண்டபோது இடம் இருப்பதாக சொன்னார்கள். உடனே முன்பதிவு செய்தேன்.

கிளம்பும் நாளும் வந்தது. தில்லியிலிருந்து விமானம் மூலம் குவஹாடி சென்றடைந்தோம். குவஹாடி விமான நிலைய கட்டடம் பெருநகரங்களில் உள்ள ஒரு சிறிய மால் அளவிற்கே இருக்கிறது. வெளியேயும் விமான நிலையத்திற்கே உரிய பகட்டு எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாகவே உள்ளது. 

விமான நிலையத்தின் வருகை பகுதியில் அஸ்ஸாமின் கலை கலாசாரம் மற்றும் அதன் சிறப்பம்சமான காண்டாமிருகம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்கள். அவற்றை பற்றிய குறிப்புகளும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.



குவஹாடி விமான நிலையம் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்த ப்ரீ-பெய்டு டாக்ஸி பூத்தில் பார்த்தல், நகருக்கு செல்ல ரூ.550/- கட்டணம் என்று இருந்தது. ஒலா-வில் முயற்சி செய்து பார்த்ததில் நானூறு ரூபாய் சொச்சத்திற்கு வண்டி கிடைத்தது. பதிவு செய்துவிட்டு ஓட்டுனரை தொடர்பு கொண்டால், அவர் நான் செல்லுமிடம் வரமுடியாது என்று கூறி பதிவை ரத்து செய்துகொள்ளுமாறு சொன்னார். 

ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நினைத்தவாறே வேறு வழியில்லாமல் ப்ரீ-பெய்டு டாக்ஸியில் விடுதிக்கு சென்றோம். குவஹாடியில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தாலும் நாங்கள் சென்றது மதிய நேரம் என்பதால் சுள்ளென்ற வெயில். வண்டியும் நான்-ஏசி என்பதால் அஸ்ஸாமின் வெயிலை அனுபவித்தவாறே விடுதி சென்றடைந்தோம்.

பயணம் தொடரும் ...

Sunday, June 03, 2018

வழிகாட்டும் கதைகள் -1


நாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனேவே வெவ்வேறு வடிவில் படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம். ஆனாலும் மீண்டும் ஒருமுறை இத்தளத்தில் படித்து பயன் பெறுங்கள்.

இந்த பதிவில் நான் பகிரப்போகும் கதை வானொலியில் முன்பு திரு தென்காசி சுவாமிநாதன் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்த ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியில் சொல்லியது.

புத்தர் சொல்லாமல் சொன்ன தத்துவம்
 
Courtesy: Google Images
ஒருமுறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஆற்றை கடப்பதற்கு ஏற்ற இடத்தை அடைந்தபோது, கரையில் ஒரு இளம்பெண் அழுதுகொண்டிருப்பதை பார்த்தார்கள். புத்தர் அந்த பெண்ணிடம் அவள் அழுதுகொண்டிருப்பதற்கான காரணத்தை கேட்டார்.

அவள், “நான் ஆற்றிற்கு அந்தப்பக்கம் இருக்கும் ஊருக்கு செல்லவேண்டும். ஆற்றில் நீர் அதிகமாக இருக்கிறது. எனக்கு நீச்சலும் தெரியாது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கிறேன்” என்றாள்.

உடனே புத்தர், “கவலைப்படாதே பெண்ணே. நாங்களும் ஆற்றை கடந்து செல்லவேண்டும். நீ என் தோள் மீது ஏறி உட்கார்ந்துகொள். நான் உன்னை ஆற்றின் அக்கரையில் விட்டுவிடுகிறேன்” என்றார்.

உடனே அந்த இளம்பெண்ணும் தன கவலை தீர்ந்தவளாய் புத்தரின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். புத்தரும் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கிவிட்டார். அவள் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லி தன் வழியே சென்றாள்.

புத்தரும் சீடர்களுடன் தன் வழியில் பயணத்தை தொடர்ந்தார். மாலை வேளையில் அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊரை அடைந்தார்கள். அப்போதுதான் அவர் தன் சீடர்களில் ஒருவர் மிகவும் குழப்பமாய் இருப்பதை கவனித்தார். அந்த சீடரை அழைத்து குழப்பத்திற்க்கான காரணத்தை அவர் கேட்டார்.

சீடர், “குருவே, நாமோ சன்யாசிகள். ஆனால், இன்று காலை ஆற்றை கடக்கும்போது நீங்கள் ஒரு இளம்பெண்ணை தோள் மீது ஏற்றிகொண்டீர்கள். அது எப்படி சரியாகும்?” என்றார்.

அதற்கு புத்தர், “நான்தான் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டேனே. நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?”, என்றார்.

நம்மில் பெரும்பாலானோர் அந்த சீடரைப் போலத்தான் இருக்கிறோம். எந்த  விஷயத்தை எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பல சமயம் அவற்றிற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுப்பதால் நாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப் படுத்துகிறோம். அதை உணர்ந்து பக்குவம் அடையும்போது நாமும் அந்த சீடனின் நிலையில் இருந்து புத்தனின் நிலைக்கு உயர்கிறோம்.

Tuesday, May 15, 2018

இசை என்னும் இன்ப வெள்ளம்

சில நாட்களுக்கு முன் எனக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு ஒலிப்படத்தின் (video) யூ டியூப் சுட்டி வந்தது.  சமீபத்தில் வந்த பத்மாவத் படத்தின் கூமர் பாட்டு வீணையில் வாசிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைப்பு சொன்னது. அந்த பாட்டு நன்றாக இருக்கும் என்பதால், வீணையில் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்ற பார்க்கும் ஆவலில் அந்த சுட்டியை தொடர்ந்தேன். 

வாசிப்பை பார்த்து அசந்துபோய்விட்டேன். இப்படி ஒரு திறமையா என்று. கலைஞரின் பெயர் ஸ்ரீவாணி. ஹைதராபதை சேர்ந்தவர். 

நான் ரசித்த அந்த ஒலிப்படம் உங்களுக்காக இதோ. நீங்கள் இதுவரை கூமர் பாடலை கேட்டதில்லை என்றால் முதலில் அதை கேட்டுவிட்டு பின்னர் அந்த பாடலின் வீணையிசை வடிவை கேளுங்கள். உங்களுக்காக இரண்டு ஒளிப்படங்களும் இங்கே.

கூமர் பாடல் (தமிழ்):



கூமர் பாடல் (ஹிந்தி):



வீணையிசை  வடிவம்:



யூ டுயூபில் அவரை பற்றி தேடியபோது, அவரது சேனல் கிடைத்தது. அதில் அவர் பல்வேறு பிரபல பாடல்களை வீணையில் அற்புதமாக வாசித்த ஒலிப்படங்கள் உள்ளன.

அவர் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த மேலும் இரு பாடல்களின்  வீணையிசை வடிவம் உங்களுக்காக. 

மரியான் படத்தில் வரும் "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன" என்ற பாடல் வீனையிசையாக.



அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ" பாடல் வீனையிசையாக.


நீங்களும் இந்த வீணையிசை வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, May 13, 2018

தங்க மழை பாரீர்!

From Google Images

“பொன்னர் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே”

சிவ பெருமானின் ஜடாமுடியில் மிளிரும் கொன்றை பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. தற்போது தில்லியில் பிரதான சாலைகள் பலவற்றில் உள்ள கொன்றை மரங்களில் தங்கமே பூக்களாய் பூத்ததோ என்று கண்டு மயங்கும்படி கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிகின்றன. இலைகள் ஏதுமின்றி வெறும் பூக்கள் மட்டுமே பூத்துக் குலுங்கும் கொன்றை மரத்தை கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.
From Google Images
மேலே உள்ள திருவாசக வரிகளின் மூலம் எனக்கு கொன்றை பூவை பற்றிய அறிமுகம் கிடைத்தாலும், அது பார்பதற்கு எப்படி இருக்கும் என்று எனக்குள் ஆவலை தூண்டியது பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் அதைப் பற்றிய வர்ணனையே. நான் பொன்னியின் செல்வன் படித்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதைய  காலகட்டத்தில் கணினியோ இணையமோ அரிது என்பதால், அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

ஐந்து வருடங்களுக்கு முன் நான் நாக்பூரில் இருந்தபோது, ஒரு ஏப்ரல் மாத மாலை நேரத்தில் (சுமார் நான்கு மணி இருக்கும்) பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் இலைகளே இல்லாமல், வெறும் பொன்னிற மஞ்சள் பூக்கள் மட்டும் பூத்துக்குலுங்கியதை கண்டு அதிசயிதுப்போனேன். மாலை வெயில் அம்மலர்களின் மீது பட்டு அதில் அந்த பூக்கள் ஜொலித்த காட்சி இன்னும் என் மனக்கண்ணிலிருந்து மறையவில்லை. அப்போதுதான் தோன்றியது, இவையே நான் காண விரும்பிய கொன்றை மலர்களாய் இருக்கலாம் என்று.

அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, எங்கள் அலுவலகத்திலேயே இருந்த கொன்றை மரம் முதல் முறையாக பூத்தது. அப்போதுதான் தெரிந்தது நான் அன்று பார்த்தது கொன்றை மலர்களே என்று.
அலுவலக வளாகத்தில் பூத்த கொன்றை மலர்கள் 
தற்போது தில்லியில் பல முக்கிய சாலைகளில் கொன்றை பூத்துக் குலுங்குவதால் அவ்வழியாக பயணிக்கும்போதெல்லாம் அவற்றை கண்டு வியந்து ரசிப்பதே என் பொழுதுபோக்கு ஆகிவிட்டது.

இதைப்பற்றி இணையத்தில் தேடியபோது, ஆங்கிலத்தில் இதன் பெயர் கோல்டன் ஷவர் ட்ரீ என்பது தெரிந்தது. இதன் தாவரவியல் பெயர் காசியா Fபிஸ்டுலா என்பதாகும். இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாம். தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில் இவை காணக் கிடைக்குமாம்.

தில்லியில் பூத்த கொன்றை 
கேரளாவின் மாநிலப் பூ மற்றும் தாய்லாந்து நாட்டின் தேசியப் பூ ஆகிய சிறப்புகள் இந்த கொன்றை பூவுக்கு உண்டு. பல கோயில்களின் தல விருட்சம் என்னும் பெருமையும் கொன்றைக்கு  இதற்குள்ளது. விஷு பண்டிகையின்போது பூஜையில் கொன்றை பூ பயன்படுத்தப் படுவதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சக அதிகாரி தெரிவித்தார். இதன் பட்டை, வேர், பூ மற்று காய் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

“புத்தம் புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்” 
என்று ஒரு பாட்டு திருடா திருடா படத்தில் வரும். கொன்றை பூத்துக் குலுங்குவதை பார்க்கும்போது, தங்க மழை பொழிகிறது பாருங்கள் என்று கத்தவேண்டும் போல் தோன்றுகிறது.

From google Images
சரம் சரமாய் பூத்துத் தொங்கும் இந்த மலர்களை பார்த்துக்கொண்டு இருப்பதே மனதிற்கு அமைதி தருவதாக இருக்கிறது.  சாலைகளின் இருபுறமும் இந்த மரத்தை நட்டு வைத்தால், வெயில் காலத்தில் இந்த பூக்களை பார்த்து வெம்மையின் கொடுமையை மறந்து இருக்கலாம்.
From Google Images
அடுத்தமுறை நீங்கள் கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிவதை பார்த்தால் ஒரு நிமிடமாவது நின்று அதன் அழகை ரசித்துவிட்டுச் செல்லுங்கள்.